Home Uncategorized பிறர் பொருள் மீது ஆசை வையாமை:
Uncategorized - பொது - May 18, 2011

பிறர் பொருள் மீது ஆசை வையாமை:

ஒரு முஸ்லிம் நம்பிக்கையும், நாணயமும் உள்ளவனாக இருக்க வேண்டும். அவன் பிறர் பொருள் மீது ஆசை வைக்க கூடாது. முன்னொரு காலத்தில் ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடம் விவசாய நிலம் ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தில் தங்கம் நிறைந்த குடத்தை (புதையலை) நிலத்தை வாங்கியவர் கண்டெடுத்தார்.

இந்த புதையல் உனக்குரியது. உனது தங்கத்தை நீயே எடுத்துக் கொள். நான் பூமியைத்தான் உன்னிடம் வாங்கினேன். அதிலிருந்து தங்கத்தை நான் வாங்கவில்லையே! எனவே இதை நீதான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நிலத்தை வாங்கியவர் சொன்னார்.

அதற்கு நிலம் விற்றவர் உனக்கு நிலத்தையும், அதிலுள்ளவைகளையும் விற்றுவிட்டேன். எனவே, தங்கத்தை நீதான் பெற்றுக் கொள்ள வேண்டும். அது எனக்குரியதல்ல என்றார்.

இவ்வாறு பேசிக் கொண்டேயிருந்ததில் இருவருக்குமிடையே முரண்பாடு எழுந்தது. இருவருமே புதையலை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. எனவே சட்டப்படி புதையலை யார் எடுக்க வேண்டும் என்பது பற்றி தீர்ப்பு கேட்க ஒரு நீதிபதியிடம் சென்றனர்.

நீதிபதி அவர்களிருவரைப் பார்த்தும், உங்களுக்கு குழந்தைகள் இருக்கிறார்களா? என்று கேட்கவும், ஒருவர் எனக்கு ஆண் மகன் இருக்கிறான் என்றும், மற்றவர் எனக்கு பெண் மகள் இருக்கிறாள் என்று சொன்னதும் நீதிபதி சொன்னார் அந்த இருவருக்கும் திருமணம் செய்து வையுங்கள் இந்தப் புதையலை அவ்விருவருக்கும் கொடுப்பதுடன் தர்மமும் செய்யுங்கள் என்று தீர்ப்பு வழங்கினார்.
இந்த ஹதீது புகாரி, முஸ்லிம் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

படிப்பினை:
தம்பி, தங்கைகளே!

இந்த சம்பவத்தில் இடம் பெற்றவர்கள் எவ்வளவு நல்ல மனிதர்கள் பார்த்தீர்களா? அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படாத இவர்கள் தங்களிடம் ஹராமான பொருள் சேர்ந்து விடக் கூடாது என்று கவனமாக இருந்துள்ளனர்.

அதேபோல் நீங்கள் எங்காவது கீழே ஒரு பொருளைக் கண்டு எடுத்தால் அதற்குரியவர்களைக் கண்டு அதை ஒப்படைத்து விட வேண்டும்.

அடுத்து உங்கள் நண்பர்களுடன் பேச்சு பேசி வரும்போது சர்ச்சை , விவாதங்கள் ஏற்படலாம். அச்சமயத்தில் சண்டை போடாது பெரியவர்களிடம் அந்த பிரச்சனையை கொண்டு சென்று தீர்வு காண வேண்டும். சரிதானே!

Check Also

நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா?

நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? உங்கள் பெயர் வந்துவிட்டதா? http://ele…