Home Uncategorized ஒளு:
Uncategorized - பொது - February 20, 2011

ஒளு:

தண்ணீரால் உடலின் சில குறிப்பிட்ட உறுப்புக்களை சுத்தம் செய்வதற்கு ஒளு என்று பெயர். தொழுவதற்கு முன் உளு என்னும் அங்கசுத்தி செய்து கொள்ளல் வேண்டும்.

முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும், கணுக்கால் வரை உங்கள் கால்களையும் கழுவுவதோடு, நீரில் நனைத்த கைகளினால் உங்கள் தலையையும்(சிறு பகுதியைத்) தடவிக் கொள்ளுங்கள்'.
-அல்-குர்ஆன் (5:6)

இந்த ஒளு எடுப்பதற்கு ஷர்த்து, பர்ளுகள், சுன்னத்துக்கள் உண்டு.

உளுவின் பர்ளுகள்(கடமைகள்):

1.    உளுவின் கடமையை நிறைவேற்றுகிறேன் என்று நிய்யத் செய்தல்.
2.    முகம் கழுவுதல்
3.    முழங்கைகள் வரை கைகளைக் கழுவுதல்
முகம் கழுவும்போது நிய்யத் வைக்க வேண்டும். நிய்யத் இல்லாமல் முகம் கழுவினால் உளு நிறைவேறாது.
4.    தலையின் சிறுபகுதியை மஸ்ஹு செய்தல்
5.    கணுக்கால் வரை கால்களை கழுவுதல்
6.    இவைகளை வரிசைக்கிரமமாக செய்தல்.
தலைமுடி முளைத்துள்ள இடம் முதல் நாடிக்குழி வரையிலும் மற்றும் இரண்டு செவி சோனைகள் வரையிலும் உள்ள பகுதிகளையும் கழுவ வேண்டும்.

கை, கால்களை குறிப்பிட்டுள்ளபடி சிறுபகுதி கூட விடாத அளவிற்கு கழுவ வேண்டும். உளுவின் உறுப்புகளான முகம், கை, தலை,  கால்களில் நீர் சேர்வதை தடுக்கும் நகப்பாலிஷ், உதட்டு சாயங்கள், பெயிண்ட் போன்ற கட்டியான திரவப்பொருள்களிருப்பின் ஒளு நிறைவேறாது.

சற்றேழத்தாழ 280 லிட்டர் தண்ணீர் கொள்ளும் தொட்டியில் கைகளினால் நீரை அள்ளி எடுத்துக் கொள்ளலாம். இதைவிட குறைந்த அளவுள்ள தொட்டிகள், வாளிகள், பாத்திரங்கள் முதலியவற்றிலிருந்து நீரைக் கைகளில் ஊற்றியே ஒளு செய்வது சிறப்பானதாகும்.
வரிசைக் கிரமங்களுக்கு மாற்றமாக ஒளு செய்தால் ஒளு நிறைவேறாது.

உளுவின் சுன்னத்துக்கள்:

'அவூது பில்லாஹி மினஷ்ஷைத்தானிர்ரஜீம். பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம். அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு. அல்ஹம்துலில்லாஹில்லதீ ஜஅலல் மாஅ தஹூரா.' என்ற சொற்றொடரை உளுவின் ஆரம்பத்தில் ஓதுவதும், இதனை முழுமையாக ஓத முடியாவிட்டால் 'பிஸ்மில்லாஹ்' மட்டும் ஓதுவதும் சுன்னத்தாகும். அத்துடன் இரு கைகளின் முன் பகுதிகளை மணிக்கட்டு வரை மூன்று முறை கழுவுவதும் சுன்னத் ஆகும். மிஸ்வாக் செய்வது சுன்னத்தாகும்.

மிஸ்வாக் செய்தபின் மூன்று முறை வாய் கொப்பளிப்பது, மூக்கின் உள் நீர் செலுத்தி அதன் அழுக்கை அகற்றுவதும், ஒரு சிரங்கை நீரிலேயே வாயையும், மூக்கையும் இணைத்தே மூன்று முறை கழுவுவதும,;  அடர்த்தியான தாடியை விரல்களால் கோதி கழுவுதல், கை கால் விரல்களை கோதி கழுவுதல் ஒவ்வொரு உறுப்பையும் மும்முறை கழுவுதல் ஆகிய இவையாவும் சுன்னத்துக்களாகும்.

உளுவின் ஒழுக்கங்கள்:

உளுச் செய்யும்போது கிப்லாவை முன்னோக்கி அமர்தல், வீண் பேச்சுக்களைத் தவிர்த்தல், 'ஹவ்ழ்'- நீர்தொட்டி உளுச் செய்பவரின் வலப் பாகத்திலும், ஊற்றிக் கழுவும்போது நீர்ப்பாத்திரம் அவரின் இடது பாகத்திலும் இருக்கும் அமைப்பில் உளுச் செய்தல், தேவையற்றவர்கள் பிறரின் உதவியின்றி தாமாகவே உளு செய்தல், வியாதி, குளிர், சளி போன்ற காரணமின்றி உளுச் செய்த நீரைத் துடைக்காமலிருத்தல் ஆகியவை உளுவின் ஒழுக்க முறைகளான சுன்னத்துக்களாகும். ஒவ்வொரு உறுப்பையும் கழுகும்போதும் ஷஹாதத் கலிமாவை

'அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன ஸய்யிதனா முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு' என்று ஓதுவது சுன்னத் ஆகும்.

உளுச் செய்தபின் கையிலுள்ள நீரைக் குடிப்பது சுன்னத்தாகும். 'இந்நீர் அனைத்து வியாதிகளுக்கும் அருமருந்தாகும்' என நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: நஸயீ, ஹாகிம்)

உளுச் செய்தபின் இரு கரங்களையும் முகத்தையும் வான் நோக்கி உயர்த்தி

'அஷஹது அன்லாஇலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸூலுஹு அல்லாஹும்மஜ்அல்னீ மினத் தவ்வாபீன வஜ்அல்னீ மினல் முததஹ்ஹிரீன வஜ்அல்னீ மின் இபாதிகஸ் ஸாலிஹீன ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக வஅஷ்ஹது அன்லாஇலாஹ இல்லா அன்த அஸ்தக்ஃபிருக வஅதூபு இலைக.'
என்ற துஆவை ஓதுவதும், உயர்த்திய கரங்களைத் தாழ்த்தி மூன்று முறை 'இன்னா அன்ஜல்னா' ஸூராவை ஓதுவதும் அதன்பின்பு

'அல்லாஹும்மஃபிர்லீ தன்பீ வவஸ்ஸிஃ லீ ஃபீ தாரீ வபாரிக் லீ ஃபீ ரிஸ்கீ வலாதஃப்தின்னீ பிமா ஜவய்த அன்னீ'

என்று ஓதுவதும் சுன்னத்தாகும்.

ஒருவர் உளு செய்தபின் அதன் துஆவை ஓதினால் அவருக்காக சுவனத்தின் எட்டு வாயில்களும் திறக்கப்படும். அவர் விரும்பிய வாயில் வழியாக நுழைந்து செல்லட்டும்; என்றும்(நூல்: முஸ்லிம்)
'அவருடைய அந்தச் செயல் முத்திரையிட்டுப் பாதுகாக்கப்படுகிறது. அதன் நன்மையை அவர் அடைந்தே தீருவார்' என்றும் (நூல்: ஹாகிம்) துஆவின் பெருமையையும் சிறப்பையும் பற்றி அண்ணலாரின் அரும்மொழிகள் இருக்கின்றன.

உளுவின் சுன்னத்தான தொழுகை:

உளுச் செய்யும் நேரங்களிலெல்லாம் உளுவின் சுன்னத்தான தொழுகையைநிறைவேற்றுகின்றேன் என்ற நிய்யத்துடன் இரண்டு ரக்அத்துகள் தொழுவது சுன்னத்தாகும். முதல் ரக்அத்தில் ஸூரத்துல் பாத்திஹாவிற்குப் பின்

'வலவ் அன்னஹும் இதுளலமூ அன்ஃபுஸஹும் ஜாஊக ஃபஸ்தஃக் ஃபருல்லாஹ வஸ்தக்ஃபர லஹுமுர் ரஸூலு லவஜதுல்லாஹ தவ்வாபர் ரஹீமா'

என்ற ஆயத்தை ஓதுவதும் இரண்டாவது ரக்அத்தில்,

'வமன் யஃமல் ஸூஅன் அவ்யள்லிம் நஃப்ஸஹு ஃதும்ம யஸ்தஃபிரில்லாஹ யஜிதில்லாஹ ஙஃபூரர் ரஹீமா' என்ற ஆயத்தை ஓதுவதும் சுன்னத்தாகும்.

உளுவின் மக்ரூஹுகள்:

1.    அடர்த்தியான தாடியை கோதி கழுவாமலிருத்தல்.
2.    கை, கால்களை கழுவுவதில் இடது பாகங்களை முற்படுத்துதல்.
3.    கண்களுக்குள் நீர் செலுத்துதல்.
4.    நீரை முகத்தில் அடித்துக் கழுவுதல்
5.    அவரவர் முகத்திற்கு நேராக அல்லது கிப்லாவின் திசை நோக்கி துப்புதல்.
6.    உளுவின் உறுப்புகளை மூன்று முறைகளை விட அதிகமாகவோ, குறைவாகவோ கழுவுதல்.
7.    மிஸ்வாக் செய்வதை விடுதல்
8.    தேவையின்றி பிறரின் உதவியினால் உளு செய்தல்
9.    உளுச் செய்யும்போது நீரை உதறுதல்.
10.    வெயிலில் சூடான நீரால் உளுச் செய்தல்.

உளுவை முறிப்பவை:

1.    காற்று, நீர், மலம், இரத்தம் புழு போன்றவை மனிதனின் முன்பின் துவாரம் வழியாக வெளிவந்தால் உளு முறிந்து விடும்.
2.    போதை, பைத்தியம், மயக்கம் உறக்கம் இவைகளினால் உணர்விழந்தால் உளு முறிந்து விடும். உட்கார்ந்து தூங்குவதினால் உளு முறியாது.
3.    ஆணோ பெண்ணோ இன உறுப்புகளை அல்லது மலவாயைத் திரையின்றி உள்ளங்கை கொண்டு தொடுவதினால் தொடுபவரின் உளு முறிந்து விடும்.

4.    திருமணத்திற்கு ஹலாலான ஆண் பெண்களின் மேனிகள் திரையின்றி ஒன்றோடு ஒன்று உராய்வதினால் இருவரின் ஒளுவுமே முறிந்து விடும். ஆசையினால் வெளிவரும் மோகநீரினாலும் ஒளு முறிந்து விடும். இந்திரியம் வெளியாவதினால் ஒளு முறிவதில்லை. ஆனால் குளிப்பது கடமையாகும்.

சுன்னத்தான உளு:

1.    குர்ஆனை தொடாமல் நாவினால் ஓதுவதற்காக.
2.    மய்யித்தை குளிப்பாட்டியதற்காக அல்லது அதை சுமந்ததற்காக.
3.    ஹதீது போன்ற மார்க்க நூல்களை படிப்பதற்காக.
4.    பால்வேறுபட்ட சிறார்களை தொட்டதற்காக
5.    மறைவிட ரோமங்களையும், இன உறுப்புகளைச் சுற்றியுள்ள பகுதிகளையும் தொட்டதற்காக.
6.    மனைவியுடன் இணைவதற்காக.
7.    உறங்குவதற்காக
8.    நகம், தலைமுடி, மீசை ஆகியவற்றை களைந்ததற்காக.
9.    ஆணையோ, பெண்ணையோ ஆசையுடன் பார்த்ததற்காக.
10.    கோபம் அடைந்ததற்காக.
11.    வாந்தி எடுத்ததற்காக.
12.    மார்க்க உபதேசங்களை கேட்பதற்காக
13.    நல்லோர்களின் அடக்கத்தலங்களை தரிசிப்பதற்காக.
14.    உடலில் இரத்தம் எடுத்ததற்காக.
15.    பாங்கு சொல்வதற்காக.
16.    பள்ளிவாசலில் நுழைவதற்காக அல்லது தங்குவதற்காக மற்றும் பெருந்துடக்குள்ளவர்கள் குடிப்பதற்காக, உண்பதற்காக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…